கேரளாவில் பெருமழை: உயிரிழப்பு 9 ஆக உயர்வு, 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான பல்வேறு விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தவும், மீட்பு பணிகளை வேகப்படுத்தவும் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய வானிலை மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
12 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
மழை தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புறம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள தொழிற்கல்வி கல்லூரிகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
குறிப்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ரன்னி மற்றும் பிற தாழ்வான பகுதிகளில் பம்பை மற்றும் மணிமலா ஆறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரையிலான காலகட்டத்தில் கேரளா இயல்பை விட 3 மடங்கு அதிக மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.