LOADING...
16வது நாளில் மத்திய கிழக்கு போர்! சவுதி மற்றும் UAE-இல் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானின் 'ஆபத்தான ட்ரோன்' தாக்குதல்

16வது நாளில் மத்திய கிழக்கு போர்! சவுதி மற்றும் UAE-இல் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 15, 2026
10:47 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் உக்கிரமான தாக்குதலை நடத்தியுள்ளது. 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பிராந்தியத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய இலக்காக சவுதி அரேபியாவில் உள்ள அல்-கர்ஜ் விமான தளம் அமைந்தது. இந்தத் தளம் ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் F-35 மற்றும் F-16 போர் விமானங்கள் மற்றும் உளவு பார்க்கும் AWACS விமானங்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுவதால், அந்தத் தளத்தை ஈரான் குறிவைத்துள்ளது.

தாக்குதல்

மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்

சவுதி அரேபியா மட்டுமின்றி, கீழ்க்கண்ட இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளும் ஈரானின் துல்லியமான ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகின: ஐக்கிய அரபு அமீரகம்: அல் தஃப்ரா விமான தளம் மற்றும் ஃபுஜைரா. பஹ்ரைன்: ஜுபைர் தளம். குவைத்: அலி அல் சேலம் விமான தளம். ஜோர்டான்: அல் அஸ்ராக் தளம். கூடுதலாக, இஸ்ரேலின் முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் அமைப்புகளையும் ஈரான் தாக்கி அழித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உயிரிழப்புகள்

போரின் பின்னணி மற்றும் உயிரிழப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போர் தொடங்கியது. ஈரானின் அதிகாரப்பூர்வத் தகவல்படி, இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 1,300 பேர் பொதுமக்கள் ஆவர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுவீச்சில் ஈரானில் சுமார் 24,500 சிவிலியன் கட்டடங்கள், 20,000 வீடுகள் மற்றும் 69 பள்ளிகள் சேதமடைந்துள்ளன.

Advertisement

எச்சரிக்கை

ஈரானின் எச்சரிக்கை

ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர், "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க வீரரையும் நாங்கள் துல்லியமாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உளவுத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல்கள் தொடரும்." என்று எச்சரித்துள்ளார். தங்களது நிலப்பரப்பை ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்காத நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என்றும் ஈரான் அறிவித்துள்ளது.

Advertisement