கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உறுதிப்படுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சனியன்று, ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவத்தால் MSC ஏரிஸ் என்ற சரக்கு கப்பல் கைப்பற்றப்பட்டது. இந்த தகவல் வெளியானதும், ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி அழைப்பில், MSC ஏரிஸ்-ல் உள்ள 17 இந்தியக் குழு உறுப்பினர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார் எனவும், இது தொடர்பாக தெஹ்ரானிடம் உதவி கோரினார் எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரானிய அமைச்சரிடம் பேசிய ஜெய்சங்கர்
இஸ்ரேலுடனும் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
இதே வேளையில் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சருடனும் பேசியுள்ளார். ஏப்ரல் 13 அன்று, தி அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்ட ஒரு வீடியோவில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு சரக்கு கப்பலை, ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய ஈரான் கமாண்டோக்கள் சோதனையிட்டதைக் காட்டியது. முன்னதாக ஏப்ரல் 1 அன்று சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமை பிற்பகுதியில் ஈரான் சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை தாக்கியதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரான் அமைச்சருடனான தொலைபேசி அழைப்பின் போது, ஜெய்சங்கர் பதட்டங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி கூறினார்.