Page Loader
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான் 

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான் 

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2024
09:28 am

செய்தி முன்னோட்டம்

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஆனால், ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது. எனவே, ஹெஸ்புல்லா அமைப்பு போன்ற பயங்கரவாத அமைப்புகளை வைத்து தாக்குதல் நடத்தாமல், ஈரானே களமிறங்கி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.

இஸ்ரேல் 

ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல் 

ஏற்கனவே, காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே 6 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில், மேலும் போர் பரவும் அபாயம் எழுந்துள்ளது. இதற்கிடையில், இந்தியா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டாம் என தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் சீக்கிரமே இஸ்ரேலை தாக்க முயற்சிக்கும் என்று கூறியுள்ளார். "நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம். ஈரான் வெற்றிபெறாது" என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.