
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்தது போராட்டம்; காரகோரம் நெடுஞ்சாலையை முடக்கிய கில்கிட்-பால்டிஸ்தான் மக்கள்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பால்டிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டுக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த காரகோரம் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுள்ளனர்.
பாகிஸ்தான்-சீன வர்த்தகர்கள் நடவடிக்கைக் குழு தலைமையிலான இந்த போராட்டம், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சொந்த கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) உட்பட அனைத்து கட்சியினரின் ஆதரவையும் பெற்றுள்ளது.
இது ஷெபாஸ் ஷெரீப் அரசின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சோஸ்ட் உலர் துறைமுகத்தில் சுங்க அனுமதியை நிறுத்தி வைத்ததால் ஏற்பட்ட மக்களின் கோபத்தால் வெடித்துள்ளது.
ஹன்சா, கில்கிட் மற்றும் நகரைச் சேர்ந்த வர்த்தகர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் தங்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்புக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டினர்.
துறைமுகம்
துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் சரக்குகள்
250 க்கும் மேற்பட்ட சரக்குகள் ஆறு மாதங்களாக துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றன, இதனால் கடுமையான நிதி இழப்பு ஏற்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு முறை பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் உடனடியாக அனுமதி கோருகின்றனர், மேலும் அவர்களின் குறைகள் தீர்க்கப்படும் வரை சீனா-பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் (CPEC) பாதையை மூடி வைத்திருப்பதாக உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, போராட்டங்கள் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் இதர பயணிகளையும் சிக்கித் தவிக்க வைத்துள்ளன, நெடுஞ்சாலையில் நீண்ட வாகன வரிசைகள் நீண்டுள்ளன.
தொழில்துறை வாய்ப்புகள் இல்லாதது, மின்சார பற்றாக்குறை மற்றும் பிராந்தியத்தில் நில அபகரிப்புகள் என நீண்டகாலமாக நிலவி வரும் விரக்திகளையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஆளும் கட்சி
ஆளும் கட்சியினரும் அரசுக்கு எதிராக போராட்டம்
ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் உள்ளூர் தலைவர் ஜாவேத் ஹுசைன் தனது சொந்தக் கட்சியின் அரசாங்கத்தை விமர்சித்தார்.
வரி வசூலித்த போதிலும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு அரசு எதுவும் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
கில்கிட்-பால்டிஸ்தான் நிர்வாகத்தின் அதிகாரிகள், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஒப்புக்கொண்டு, பொறுப்பை ஷெபாஸ் ஸ்ரீரீப் அரசுக்கு மாற்றினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகளை அந்நாட்டு அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக தொடர்ந்து மக்களிடையே குமுறல்கள் இருந்து வரும் நிலையில், தொடர் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.