பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
கனடா தூதர்களை இந்திய அரசு வெளியேற்றி, இரு நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாகியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் நிஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பேசினார். இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், இச்சம்பவம் இருநாட்டு உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா கனடாவிடவும், கனடா இந்தியாவிடமும் பரஸ்பரம் தூதர்களை வெளியேற உத்தரவிட்டனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் வெளியேறினர்.
இந்தியாவின் நடவடிக்கை வர்த்தகம், பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாதிக்கும்- ட்ரூடோ
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் பிராம்ப்டன் பகுதியில் தொலைக்காட்சி வழியாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரூடோ, இந்தியாவின் இந்த நடவடிக்கை வர்த்தகம், பயணம் மற்றும் கனடாவில் படிக்கும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்களை பாதிக்கும் என தெரிவித்தார். "இந்திய அரசாங்கம், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நம்பமுடியாத அளவிற்கு கடினமாக்குகிறது. மேலும் அவர்கள்(இந்தியா) ராஜாங்க ரீதியான அடிப்படை கோட்பாடுகளை மீறி இதை செய்கிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார். "இந்திய துணை கண்டத்தில் தங்களின் பூர்வீகத்தை கொண்டிருக்கும் லட்சக்கணக்கான கனேடியர்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்காக இது எனக்கு கவலை அளிக்கிறது" என தெரிவித்தார். கனடாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்திய பாரம்பரியம் கொண்டவர்கள். மேலும் கனடாவில் படிக்கும் 40% இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.