சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது. இதனைத் தொடர்ந்து, தென் இந்தியப் பெருங்கடலில் ஜனவரி 5 முதல் மே 2024 வரை, பெய்ஜிங் மற்றொரு ஆய்வுக் கப்பலைத் துறைமுகங்களில் நிறுத்தி ஆழமான கடல் ஆய்வுகளை நடத்த அனுமதிக்க கொழும்பு மற்றும் மாலத்தீவுகளிடம் அனுமதி கேட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவுகள், ஏற்கனவே சீன கப்பலுக்கு அனுமதி வழங்கியதற்கு, இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் சீனக் கடலில் உள்ள ஜியாமென் கடற்கரையில் உள்ள, சியாங் யாங் ஹாங் ஆய்வு கப்பல், இலங்கை மற்றும் மாலத்தீவுகளிடம் அனுமதி கிடைத்தபின், அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
சென்னைக்கு அருகில் தென்பட்ட சீனா ஆய்வு கப்பல்
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில், இந்தியாவின் கடும் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், ஷி யான் 6 ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த கப்பல், இலங்கைக்கு செல்வதற்கு முன், இந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி, சென்னையிலிருந்து 500 கடல் மைல்கள் தொலைவில் தென்பட்டது. பின்னர் அங்கு சென்று பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டது. தற்போது ஆய்வு செய்ய இருக்கும் சியாங் யாங் ஹாங், 4,813 டன் எடை கொண்ட அதிநவீன ஆய்வு மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை கொண்ட கப்பலாகும்.
சீனக் ஆய்வு கப்பலால் ஏன் இந்தியா கவலைப்படுகிறது?
கடலாய்வு என்ற பெயரில் சீன பாலிஸ்டிக் ஏவுகணை டிராக்கர்கள் மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பு கப்பல்களை, மாலத்தீவுகள் மற்றும் இலங்கை அனுபதிப்பது, சீனா இந்தியாவை உளவு பார்ப்பதற்காக என இந்தியா கருதுகிறது. மேலும் இது குறித்து, இந்த ஆண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வந்தபோது, பிரதமர் மோடி தனது கவலைகளை தெரிவித்தார். கடல் ஆய்வு என்ற பெயரில், பெய்ஜிங் உண்மையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே உள்ள தொண்ணூறு டிகிரி மேடு முதல் ஆழமான தென் இந்தியப் பெருங்கடல் வரை, இந்தியப் பெருங்கடல் படுக்கையை நீர்மூழ்கி கப்பல்களின் தாக்குதலுக்கு பயன்படும் வகையில் வரைபடம் ஆக்குவதாக கூறப்படுகிறது.