சீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் உளவு பார்த்ததாக கூறப்பட்ட சீன பலூன், அந்நாட்டிற்கு தகவல்களை அனுப்ப அமெரிக்காவின் இணைய சேவையை பயன்படுத்திக் கொண்டதாக, அமெரிக்க அதிகாரி தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. உளவு பலூனின் இருப்பிடத்தை கண்காணிக்கவும், அதை கண்டறியவும் அமெரிக்க அதிகாரிகளுக்கு, அது பயன்படுத்திய இணைய சேவையே உதவியதாகவும் கூறப்படுகிறது. சீன பலூன் எந்த நிறுவனத்தின் இணைய சேவையை பயன்படுத்தியது என்ற தகவல் வெளியிடப்படாத நிலையில், பலூன் அமெரிக்காவைக் கடக்கும்போது பெய்ஜிங்குடன் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டது என அந்த அதிகாரி கூறியுள்ளார். பெய்ஜிங்குடன் தொடர்பு கொள்ள, பலூன் அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியதாக என்பிசி செய்தி முதலில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு பலூன் எனக் கூறும் சீனா
மேலும் அந்த அதிகாரி, சீனாவிற்கு உணவு பார்த்த தகவல்களை அனுப்ப இணைய சேவை பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். பலூன் படம் பிடித்த புகைப்படங்கள், மற்றும் இதர தரவுகளை சேகரித்து வைக்க இணையத்தை பயன்படுத்தியதாக, பிப்ரவரி மாதம் அது சுட்டு வீழ்த்தப்பட்ட பின் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக எஃப்பிஐ மற்றும் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் இயக்குனர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். வாஷிங்டனில் உள்ள சீன தூதரகத்தை சிஎன்என் அணுகிய போது, அவர்கள் இது தவறாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்த வானிலை ஆய்வு பலூன் என்ற அவர்களின் முந்தைய கருத்தை மீண்டும் உறுதிசெய்தனர்.
உளவு பலூன் அமெரிக்காவிற்கு வந்ததை சீன தலைவர்கள் விரும்பவில்லை
சீன ராணுவத்தின் விரிவான கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உளவு பலூன் இருக்கலாம் என, அமெரிக்க ராணுவத்தினர் அப்போது கருதினர். அமெரிக்க ராணுவத்தின் தகவலின் படி, இந்த பலூன் ஐந்து கண்டங்களில் டஜனுக்கும் மேற்பட்ட உளவுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. உளவு பலூன் அமெரிக்காவின் எல்லைக்குள் வருவதை சீன அரசியல் தலைவர்கள் விரும்பவில்லை எனவும், இந்த தவறுக்காக அதில் பணியாற்றி வந்த அதிகாரிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததாக, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.