Page Loader
ஏப்ரல் 28 அன்று 'திடீர்' தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர் 
தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர்

ஏப்ரல் 28 அன்று 'திடீர்' தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர் 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2025
08:56 am

செய்தி முன்னோட்டம்

இந்த மாத தொடக்கத்தில், கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு பதவியேற்ற மார்க் கார்னி, ஏப்ரல் 28 ஆம் தேதி ஒரு 'திடீர்' தேர்தலை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 'நியாயமற்ற' வரிகளால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு வலிமையான ஆணையைப் பெறுவதற்காக இந்த தேர்தல் என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். டிரம்பின் வரிகளை கனடா சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும், இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து கனேடியர்கள் தேர்வு செய்யத் தகுதியானவர்கள் என்றும் கார்னி கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

தேர்தல்

முன்கூட்டியே அறிவிக்கப்படும் தேர்தல்

முன்னதாக அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்னர் தான் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் 60 வயதான கார்னி, லிபரல் கட்சித் தலைவராகவும் இறுதியில் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயல்வதால் இந்த முன்கூட்டிய தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. அதே நேரத்தில் டிரம்ப்பின் நடவடிக்கைகளை எதிர்க்கும் தலைவரின் தேவையும் கனடாவிற்கு உள்ளது. "ஜனாதிபதி டிரம்பின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நமது இறையாண்மைக்கு அவர் விடுத்த அச்சுறுத்தல்கள் காரணமாக, நமது வாழ்நாளின் மிக முக்கியமான நெருக்கடியை நாம் எதிர்கொள்கிறோம்" என்று முன்னாள் மத்திய வங்கியாளரான கார்னி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

நிலைமை

கார்னிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா?

இரண்டு முறை முன்னாள் மத்திய வங்கியாளராக இருந்த கார்னியின் நிபுணத்துவத்தை நம்பி, அவருக்கு முன்னர் அரசியல் அல்லது தேர்தல் பிரச்சார அனுபவம் இல்லாத போதிலும், டிரம்ப் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொறுப்பை லிபரல் கட்சி அவரிடம் ஒப்படைத்தது. திடீர் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 60 வயதான அவருக்கு கனேடிய குடிமக்களின் நம்பிக்கையைப் பெற இன்னும் ஐந்து வாரங்களே உள்ளன. பல்வேறு கருத்துக் கணிப்புகள், கார்னி பிரதிநிதித்துவப்படுத்தும் லிபரல் கட்சி இப்போது தங்கள் போட்டியாளர்களான கன்சர்வேடிவ்களை விட சற்று முன்னிலையில் இருப்பதாகக் கூறுகின்றன. 2015 முதல் ஆட்சியில் உள்ள லிபெரல் கட்சி, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களை விட பின்தங்கியிருந்த நிலையில் தற்போது ஆதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.