
நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவது உண்மைதான்; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது கனடா
செய்தி முன்னோட்டம்
கனடாவில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நீண்டகால கவலைகளை, கனடா அரசின் புதிய அறிக்கை உறுதி செய்துள்ளது. கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்கள் குறித்த 2025 மதிப்பீடு என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, பாபர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் செயல்பட்டு வருவதாகவும், அவை நிதி ஆதரவைப் பெற்று வருவதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. அரசியல் நோக்கத்திலான வன்முறை தீவிரவாதம் (PMVE) என்ற பிரிவின் கீழ் வரும் இந்தக் குழுக்கள், நிதி திரட்டுவதற்காகப் பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. இதில் பணச் சேவை வணிகங்கள், வங்கித் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிரிப்டோகரன்சிகளின் தவறான பயன்பாடு ஆகியவை அடங்கும்.
ஆதாரம்
இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம்
இந்த அறிக்கை, இந்தக் குழுக்கள் ஒரு காலத்தில் பெரிய நிதி திரட்டும் நெட்வொர்க்களைக் கொண்டிருந்தாலும், இப்போது சிறிய அளவிலான தனிநபர்களைக் கொண்ட குழுக்களாகச் செயல்படுகின்றன என்று குறிப்பிடுகிறது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. புதிய பிரதமர் மார்க் கார்னி தலைமையின் கீழ் நிலைமை மெதுவாகச் சீரடைந்து வரும் நிலையில், இந்த புதிய அறிக்கை இந்தியாவின் கவலைகளுக்கு ஒரு வலுவான ஆதாரத்தை அளித்துள்ளது.