மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை!
1983 ஐசிசி உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் கூட்டாக தற்போது நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசி எறிவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில், உலகக் கோப்பை வென்ற அணியின் கேப்டன் கபில்தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
கிரிக்கெட் வீரர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் சாம்பியன் மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். அவர்கள் கஷ்டப்பட்டு வென்ற பதக்கங்களை கங்கை நதியில் கொட்ட நினைக்கிறார்கள் என்பதும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. அந்த பதக்கங்கள் பல ஆண்டுகால முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதியை உள்ளடக்கியவை, மேலும் அவை அவர்களுடையது மட்டுமல்ல, தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் அன்புடன் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்." என்று கூறப்பட்டுள்ளது.