கிரிப்டோகரன்சி பதிவுகள் : வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?
திங்கட்கிழமை (ஜூன் 5) காலை இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கிரிப்டோகரன்சி தொடர்பான பதிவுகள் வெளிப்பட்டதால், அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வாஷிங்டன் சுந்தரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கில், ஹேக் செய்யப்படவில்லை என பதிலளிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் கணக்கை தினசரி பயன்படுத்துவதில்லை என்பதை அவரது பழைய பதிவுகள் மூலம் புரிந்துகொள்ள முடிவதால், இந்த பதிலையும் ஹேக்கர்கள் பதிவிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் வீரர் அல்லது பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தொடர்ந்து ஹேக் செய்யப்படும் இந்திய வீரர்களின் கணக்குகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. அணியின் பெயரும் 'Bored Ape Yacht Club' என மாற்றப்பட்டது மற்றும் NFT தொடர்பான பதிவுகளும் வெளியிடப்பட்டது. முன்னதாக ஜனவரி 2022 இல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்டியாவின் கணக்கையும் ஹேக்கர்கள் ஹேக் செய்தனர். அவர்கள் கணக்கை திரும்ப மீட்க பணம் கொடுக்க வேண்டும் என க்ருனால் பாண்டியாவுக்கு மிரட்டல் விடுத்தனர். இல்லையெனில் கிரிப்டோகரன்சி செலுத்துதல் மூலம் கணக்கை விற்குமாறு மிரட்டினர்.