Sports Round Up : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்; அக்சர் படேல் நீக்கம்; முக்கிய விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாளான திங்களன்று (செப்டம்பர் 25) இந்தியா 2 தங்கம் மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை கைப்பற்றியது. 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி பிரிவில் இந்திய அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. மேலும், தகுதிச் சுற்றில் 1,893.7 புள்ளிகளைப் பெற்று சீனர்களின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்தனர். மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கம் வென்றது. மேலும், நான்கு வெண்கல பதக்கங்கள் உட்பட இந்தியா இரண்டாம் நாள் முடிவில் மொத்தமாக 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் ஆறு வெண்கல பதக்கம் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அக்சர் படேலுக்கு இடமில்லை
புதன்கிழமை (செப்டம்பர் 27) நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அக்சர் படேல் நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடியபோது அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது. இதற்காக, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இடம்பெற மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், அஸ்வின் ரவிச்சந்திரன் அல்லது வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரில் ஒருவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்கியது இந்தியா
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குழுவிற்கு இந்தியா விசா வழங்கியுள்ளது. முன்னதாக, விசா வழங்க இந்தியா தாமதம் செய்து வந்ததால் விரக்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு துபாயில் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமை ரத்து செய்தது. மேலும், விசா பிரச்சினை குறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இதில் தலையிடுமாறு வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குழுவிற்கு விசா வழங்கியுள்ளது. இதையடுத்து பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 27 அன்று ஹைதராபாத் வரவுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 சிக்சர் அடித்து இந்தியா சாதனை
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 24) நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் எடுத்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 சிக்சர் அடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. அதிக சிக்சர் அடித்த நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 3,007 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன.
கபில்தேவ் கடத்தப்பட்டாரா? கவுதம் காம்பிரின் வீடியோவால் பரபரப்பு
திங்கட்கிழமை (செப்டம்பர் 25) முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், கிரிக்கெட் ஜாம்பவானும் 1983 ஒருநாள் உலகக்கோப்பை நாயகனுமான கபில்தேவ் இரண்டு மர்ம நபர்களால் கடத்தப்படுவது போன்ற ஒரு தோற்றம் காணப்பட்டது. வீடியோவில் கடத்தப்பட்ட நபர் பார்ப்பதற்கு நமது கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் போல இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது உண்மையாக இருப்பது என நம்புவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அது உண்மையில்லை என்றும், விளம்பரத்திற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.