முன்னாள் ராணுவ தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது; என்ன சர்ச்சை?
செய்தி முன்னோட்டம்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக இன்றும் பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் உரையை தொடங்கிய உடனே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ராகுலின் பேச்சை தடுத்தனர். "வெளியிடப்படாத ஒரு புத்தகத்தையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளையோ அவையில் மேற்கோள் காட்டக் கூடாது" (விதி 349) என்று அவர்கள் வாதிட்டனர்.
நடந்தது என்ன?
நேற்று நடந்த விவகாரம் என்ன?
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் தேசியவாதம் குறித்த பேச்சுக்கு பதிலளித்த ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவணேவின் (இன்னும் வெளியாகாத) 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' (Four Stars of Destiny) என்ற புத்தகத்தை மேற்கோள் காட்ட முயன்றார். 2020 இந்தியா - சீனா எல்லையோர மோதல்களின் போது, இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததாகவும், அதைக் கையாள தலைமை தவறியதாகவும் நரவணே எழுதியுள்ளதாக ராகுல் காந்தி கூறினார். இதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விதி 349
விதி 349 (Rule 349) என்றால் என்ன?
இந்த விதியின்படி, அவையின் நடவடிக்கைகளுக்குத் தொடர்பில்லாத எந்தவொரு புத்தகம், செய்தித்தாள் அல்லது கடிதத்தை உறுப்பினர் வாசிக்கக் கூடாது. சபாநாயகர் ஓம் பிர்லா, முறையாக அங்கீகரிக்கப்படாத அல்லது அவையில் தாக்கல் செய்யப்படாத வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்ட ராகுலுக்கு அனுமதி மறுத்தார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங்கின் தோல்விகளை நரவணே தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். உண்மை வெளிவந்துவிடும் என்ற பயத்தால்தான் பாஜக என்னை பேசவிடாமல் தடுக்கிறது. சீனா முன்னேறி வந்தபோது 56 அங்குல மார்பு எங்கே போனது?" என்று கேள்வி எழுப்பினார்.