Sports Round Up : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா; பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 191 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் 5 பந்துவீச்சாளர்கள் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதங்கள் மூலம் 31 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
ஆர்க்டிக் ஓபன் அரையிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி
BWF சூப்பர் 500 போட்டிகளில் ஒன்றான ஆர்க்டிக் ஓபன் 2023 பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார். அரையிறுதியில் சீனாவின் வாங் ஸி யியை எதிர்கொண்ட பிவி சிந்து 12-21, 21-11, 7-21 என்ற போராடி தோற்றார். இந்த சீசனில் பிவி சிந்து அரையிறுதி வரை முன்னேறுவது இது நான்காவது முறையாகும். எனினும், இந்த சீசனில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் பிவி சிந்து போராடி வருகிறார். இதற்கிடையே, ஆர்க்டிக் ஓபனில் மற்ற இந்திய வீரர்கள் ஏற்கனவே தோற்று வெளியேறிவிட்டதால், இந்தியாவின் பதக்க வாய்ப்பு பிவி சிந்துவின் தோல்வியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி; பிரதமர் மோடி உறுதி
சனிக்கிழமை மும்பையில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை உறுதிப்படுத்தினார். 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தை தொடங்கிவைத்த மோடி, இந்தியாவில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். மேலும் 2029 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளையும் நடத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், விளையாட்டு என்பது வெறும் பதக்கங்களை வெல்வதற்காக மட்டுமே அல்ல என்றும், அது அமைதி, முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உலகை ஒன்றிணைக்கும் மற்றொரு ஊடகம் என்று தெரிவித்துளளார்.
தமிழ்நாடு முழுவதும் 50 செஸ் போட்டிகளை நடத்த உள்ளதாக செஸ் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில செஸ் கூட்டமைப்பு அடுத்த ஆண்டில் மாநிலம் முழுவதும் 50 ஐஎம் விதிமுறை மூடிய சுற்றுப் போட்டிகளை நடத்த உள்ளது என்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பத்து போட்டிகளுக்கான அட்டவணையும் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு போட்டியும் ஒன்பது சுற்றுகளாக இருக்கும் மற்றும் பத்து வீரர்கள் இடம் பெறுவர். இந்த 10 வீரர்களில் நான்கு அல்லது ஐந்து வெளிநாட்டினரும் மற்றும் ஆறு அல்லது ஐந்து இந்தியர்களும் இடம் பெறுவர். இந்தியர்களில், மூன்று அல்லது நான்கு வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்களிலிருந்து அகில இந்திய செஸ் கூட்டமைப்பால் களமிறக்கப்படுவார்கள். இந்த சுற்றுகளின் முதல் போட்டி அக்டோபர் 16-21 வரை சென்னையில் நடைபெற உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்சர் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
சனிக்கிழமை நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டியில் 6 சிக்சர்களை அடித்த ரோஹித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும், சர்வதேச அளவில் ஷாஹித் அப்ரிடி மற்றும் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக இந்த இலக்கை எட்டிய மூன்றாவது வீரராகவும் ஆனார். முன்னதாக, சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில், அனைத்து வடிவங்களிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.