Sports Round Up : இந்திய வாலிபால் அணி வெற்றி; கால்பந்து அணி சீனாவிடம் தோல்வி; டாப் விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) இந்திய வாலிபால் அணி கம்போடியாவை வீழ்த்தியது. போட்டி தொடங்கியபோது இரு அணிகளுமே சமமாக ஆதிக்கம் செலுத்திய நிலையில், பின்னர் இந்திய வீரர்கள் போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி 25-14, 25-13, 25-19 என்ற புள்ளிக்கணக்கில் மூன்று சுற்றுகளையும் கைப்பற்றி கம்போடியாவை தோற்கடித்தது. இதன் மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய இந்திய வாலிபால் அணி, தனது இரண்டாவது ஆட்டத்தில் புதன்கிழமை தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட் வழங்கியது பிசிசிஐ
ஒருநாள் உலகக்கோப்பை 2023 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், விளையாட்டு மற்றும் இதர துறையை சேர்ந்த பிரபலங்களுக்கு பிசிசிஐ கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது. முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் அமிதாப் பச்சனுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நடிகர் ரஜினிகாந்திடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கும் புகைப்படத்தையும் பிசிசிஐ தனது சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பையை பல தரப்பிலும் விளம்பரப்படுத்துவதற்காக பிசிசிஐ பல்துறை சார்ந்த விஐபிக்களுக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டாவது பதக்கத்தைக் கைப்பற்றியது இந்தியா
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. 50 மீட்டர் நிலை 3 ரைபிள் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நிச்சால், 458 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். முன்னதாக, ஜூனியர் அளவில் பல பதக்கங்களை குவித்துள்ள நிச்சாலுக்கு, இது சீனியர் உலக போட்டியில் முதல் பதக்கமாகும். இதற்கிடையே, ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்ற நிலையில், தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளியுடன் இந்தியா போட்டியை நிறைவு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி அதிர்ச்சித் தோல்வி
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 19) நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நிலை கால்பந்து போட்டியில் சீனாவை எதிர்கொண்ட இந்தியா படுதோல்வி அடைந்தது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்த நிலையில், இரண்டாவது பாதி முழுவதும் சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. இரண்டாவது பாதியில் சீனா தொடர்ச்சியாக 4 கோல்களை அடித்த நிலையில், போட்டியின் முடிவில் இந்தியா 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. கடைசி நேரத்தில் அணி அறிவிப்பு மற்றும் வீரர்கள் தயாராகாமல் இருந்தது போன்ற காரணங்கள் தான் தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
டி20 வடிவத்தில் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி
2025 ஆசிய கோப்பையை டி20 வடிவத்தில் நடத்த உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடந்தது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 8வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. 2023 ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு, இந்த போட்டி ஒருநாள் வடிவத்தில் நடந்த நிலையில், 2026இல் டி20 உலகக்கோப்பை நடைபெறுவதால், அதற்கு அணிகளை தயார் செய்யும் விதமாக 2025 ஆசிய கோப்பையை மீண்டும் டி20 வடிவத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.