ஒருநாள் உலகக்கோப்பையில் மாமனாரின் சாதனையை சமன்செய்த மருமகன்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் பந்துவீச்சாளர் ஷாஹித் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார். ஷாஹீன் அப்ரிடி ஏற்கனவே ஒருமுறை ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், இது அவருக்கு இரண்டாவது முறையாகும். மேலும், ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
12 வருடங்களுக்கு முன்பு ஷாஹித் அப்ரிடி சாதனை
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஷாஹீன் அப்ரிடியின் மாமனாரான ஷாஹித் அப்ரிடி தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை (2 முறை) ஒருநாள் உலகக்கோப்பைகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். ஷாஹீன் முதல் ஐந்து விக்கெட்டை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லார்ட்ஸ் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக எடுத்திருந்தார். 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது ஷாகித் அப்ரிடி இந்த சாதனையை முன்னர் நிகழ்த்தினார். அவரது மருமகனைப் போலல்லாமல், ஷாஹித் அப்ரிடியின் இரண்டு உலகக் கோப்பை ஐந்து விக்கெட்டுகளும் 10 நாட்களுக்குள் எடுக்கப்பட்டவை ஆகும். 2011 உலகக்கோப்பையின் போது கென்யா மற்றும் கனடாவுக்கு எதிராக அவர் இந்த சாதனையை செய்தார்.