
இளம் வயது கேப்டனாக 136 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல்
செய்தி முன்னோட்டம்
அடுத்த மாதம் டப்ளினில் நடக்கும் அயர்லாந்துக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கு இங்கிலாந்து 21 வயதான ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேலை கேப்டனாக நியமித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட இளம் வயது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, 1889 ஆம் ஆண்டு தனது 23 வயதில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக மோன்டி பௌடன் செயல்பட்ட நிலையில், அவரது 136 ஆண்டுகால சாதனையை ஜேக்கப் பெத்தேல் முறியடித்துள்ளார். செப்டம்பர் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியை வழிநடத்தும் வழக்கமான கேப்டன் ஹாரி புரூக் இல்லாத நிலையில் தற்காலிக கேப்டனாக ஜேக்கப் பெத்தேலின் நியமனம் வந்துள்ளது.
கிரிக்கெட் தொடர்
தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் தொடர்கள்
செப்டம்பர் 2 முதல் 14 வரை தென்னாப்பிரிக்காவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, அயர்லாந்து கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மலஹைடில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு அனைத்து வடிவங்களிலும் சர்வதேச அளவில் அறிமுகமான பெத்தேல், முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் அடங்கிய அனுபவம் வாய்ந்த குழுவை வழிநடத்துவார். இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் லூக் ரைட், ஜேக்கப் பெத்தேலின் தலைமைத்துவ திறன்களைப் பாராட்டினார். அயர்லாந்து தொடர் சர்வதேச அரங்கில் அவரது வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும் என்று கூறினார். அயர்லாந்து தொடருக்கான அணியில் வேகப்பந்து வீச்சாளர் சோனி பேக்கரும் இடம்பெற்றுள்ளார், அவர் தனது முதல் அழைப்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.