INDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ
இந்தியா vs பாகிஸ்தான் மோதும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடக்க உள்ளது. இந்த போட்டியை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற, போட்டிக்கு முன்னதாக சிறப்பு கலை நிகழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஏற்பாடு செய்துள்ளது. போட்டிக்கு முன்பு நடக்கும் நிகழ்ச்சியில் பாடகர்கள் சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங் மற்றும் அர்ஜித் சிங் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை நேரில் காண சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் வருவதோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜாஸ்மின் ஆர்ட்ஸ் எனும் நிறுவனம் செய்து வருகிறது.
ஜாஸ்மின் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பின்னணி
ஜாஸ்மின் ஆர்ட்ஸ் நிறுவனத்தை கலை இயக்குனர் பிரசாந்த் விச்சாரே என்பவர் நடத்தி வருகிறார். அவர் மறைந்த நிதின் தேசாய்க்கு உதவியாளராக இருந்தார். பிரிட்டிஷ் வீரர்களுக்கு எதிராக இந்திய கிராமத்தினர் கிரிக்கெட் விளையாடுவதை அடிப்படையாக கொண்ட 'லகான்' உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ள விச்சாரே தலைமையில் மிகப்பெரிய குழு இதில் பணியாற்றி வருகிறது. மைதானத்தின் தரையை சேதப்படுத்தாத வகையில் ஸ்டேஜ் அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்த குழு, ஐபிஎல் மற்றும் மகளிர் ஐபிஎல் தொடக்க விழாக்களையும் நடத்திய அனுபவம் கொண்டுள்ளனர். அவரது குழுவில் மும்பையைச் சேர்ந்த 23 தொழிலாளர்கள் உள்ள நிலையில், அதில் பலர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.