விஜய் ஹசாரே டிராபியின் தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்
2023-24 விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படுவார் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வியாழக்கிழமை (நவ.9) அறிவித்தது. உள்நாட்டு லிஸ்ட்-ஏ தொடரான இந்த போட்டித்தொடர் நவம்பர் 23 முதல் தொடங்க உள்ளது. 38 வயதான கார்த்திக், தனது லிஸ்ட்-ஏ கேரியரில் தமிழகத்திற்காக 252 போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் உட்பட 7,358 ரன்கள் எடுத்துள்ளார். அவர் கடைசியாக தமிழ்நாடு அணிக்காக நவம்பர் 2022 இல் சவுராஷ்டிராவுக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் தான் விளையாடினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் அடுத்த சீசனுக்குத் தயாராவதற்காக, தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.