"இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில
உலகில் சாதிக்க விரும்புவர்களுக்கு, கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பது போல, பல விஷயங்களில், பலரும் சாதனைகள் செய்து வருகின்றனர். சமீபத்தில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு, யாரும் தொடாத நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 முதல், உலகின் 6 கால்வாய்களை, ஒரே ஆண்டில் நீந்தி கடந்த சாதனை வரை பல சாதனைகள் வியக்கவைக்கும் சாதனைகள் நடந்தேறி வருகின்றன. ஆனாலும், இப்படியெல்லாமும் ஒரு சாதனையை என ஆச்சரியமளிக்கும் சில வினோத சாதனைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக உணவு சம்மந்தமாக சிலர் செய்த விசித்திர சாதனைகள் பற்றி இங்கே காண்போம்
உலகின் நீளமான தோசை
இந்த நீளமான தோசை பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். 90'களில் இந்த சாதனையை புரிந்தது, சென்னையின் பிரபலமான VGP கோல்டன் பீச்சில் இருந்த உணவகம் தான். அப்போது இந்த தோசை பல திரைப்படங்களில் கூட இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளது, அகமதாபாத்தை சேர்ந்த உணவகம் ஒன்று. 15 நிமிடங்களில், 53 அடி தோசை செய்து சாதனை புரிந்துள்ளனர் இந்த உணவகத்தில் செஃப்க்கள்.
பெரிதாக ஊதப்பட்ட பப்பிள் கம்
பப்பிள் கம், சுவிங் கம் போன்றவற்றை மென்று, அதில் முட்டை போல ஊதுவது சிறார்களின் பிரியமான விளையாட்டு. சில நேரங்களில் பெரியவர்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல என்பது போல, அவர்களும் கோதாவில் இருங்குவதுண்டு. யார் பெரிய சைஸ் முட்டை ஊதுவது என நண்பர்களுக்குள்ளே வேடிக்கை போட்டிகளும் நடைபெறும். ஆனால் அதையே ஒரு அமெரிக்க நபர் சாதனையாக்கியுள்ளார். 20 இன்ச் விட்ட அளவிற்கு, அவர் பப்பிள் கம் முட்டை ஊதியதற்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பெரிய சைஸ் சப்பாத்தி
சப்பாத்தி அல்லது ரோட்டி என்பது இந்திய பாரம்பரிய உணவுகளில் ஒன்று. எளிமையான, அதே நேரத்தில் சத்து நிறைந்த உணவான இந்த சப்பாத்தியை செய்து, ஒரு குழு சாதனை படைத்துள்ளது. ஜாம்நகரில் உள்ள, ஜால்ராம் கோவிலில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அந்த கோவில் நிர்வாகிகள் தயாரித்த இந்த சப்பாத்தியின் விட்டத்தின் அளவு தெரியவில்லை என்றாலும் எடை மட்டும் 63.99 கிலோக்கள் ஆகும்.
சாதனை புரிந்த பிரியாணி
உலக அரங்கில் பலரையும் கவர்ந்திழுக்கும் பிரியாணி கூட சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது தெரியுமா? ஆம், 'அதிகமான அளவில் தயாரிக்கப்பட்ட பிரியாணி' என்ற சாதனை டெல்லியில் நடந்துள்ளது. 60 சமையல் நிபுணர்கள் இணைந்து, எலக்ட்ரிக் கம்பம் நீளத்தில் உள்ள கரண்டிகளை கொண்டு, தயாரித்துள்ளனர். இவர்களுக்கு உதவ 3 கிரேன்கள், ஒரு பெரிய கலன் மற்றும் 3 அடி ஆழமான அடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 6600 பவுண்டு எடைகொண்ட அரிசி, 187 பவுண்டுகள் மிளகாய், 317 கேலன்கள் எண்ணெய், 8045 பவுண்டுகள் காய்கறிகள் மற்றும் 190 பவுண்டுகள் உப்பு ஆகியவையும், 6000 லிட்டர் தண்ணீர் மற்றும் 10 கிலோ மசாலாபொருட்களையும் பயன்படுத்தி 13,000 கிலோ எடை கொண்ட பிரியாணி தயாரிக்கப்பட்டது
இந்த காலவரிசையைப் பகிரவும்