உலக நீரிழிவு நோய் தினம்- காலனி ஆதிக்கத்திற்கும், இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கும் என்ன தொடர்பு?
இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் அது ஏன் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? உலகில் உள்ள 195 நாடுகளில் ஏதாவது ஒரு நாடு நீரிழிவு நோயின் தலைநகரமாக இருக்கலாம், ஆனால் இந்தியா இருப்பதற்கு காரணம் என்ன? சமீபத்திய காலம் வரை உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவோ, அல்லது இந்தியர்களை விட அதிகமான துரித உணவுகளை உட்கொள்ளும் அமெரிக்காவோ, நீரழிவு நோயின் தலைநகரமாக இல்லை. ஆனால் பெரும்பாலும் பாரம்பரிய உணவு பழக்கவழக்கங்களையும், பெரும்பான்மையாக, வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும் இந்தியர்கள் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணம், நம்மீதான 300 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் ஒளிந்துள்ளது.
பஞ்சத்தால் ஏற்படும் நீரிழிவு நோய்
நமது உடல், நமது முன்னோர்களிடமிருந்து பண்புகளை பெறுகிறது. உதாரணமாக, நமது உடல் ஊட்டச்சத்துகளை சேமிப்பதும், கொழுப்புகளை எரிப்பதும் நமது முன்னோர்கள் நமக்கு கடத்திய மரபணு சார்ந்தவை. நமது முன்னோர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பஞ்சத்திற்கு உட்படுத்தப்பட்டார்கள். ஒருமுறை அல்ல இருமுறையல்ல 31 முறை. இந்தியா துணைக் கண்டத்தில், கடந்த 1611 ஆம் ஆண்டு நங்கூரம் இட்ட கிழக்கின் புதிய கம்பெனியின் கப்பல், 1858 ஆண்டு வரை நம்மை ஆண்டது. பின்னர், 1858- 1947 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ராணியின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்தது. கிழக்கு இந்திய கம்பெனியின், பிரிட்டிஷ் ராஜ்யமும் இந்தியர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்காமல் இருட்டடிப்பு செய்தன. இதனால் ஏற்பட்ட பஞ்சத்தில், சுமார் 84 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்தனர். இது வரலாறு.
வரலாறுக்கும் அறிவியலுக்கும் இடையான தொடர்பு
நிபுணர்கள் அறிவியலுக்கும் வரலாறுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். பஞ்சத்தை அனுபவித்த ஒரு தலைமுறையின் வாரிசுதாரர்களுக்கு, அடுத்த தலைமுறையில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயம் இரண்டு மடங்கு அதிகரிப்பதாக கூறுகிறார்கள். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம், பஞ்சத்தை எதிர் கொண்டவர்களின் வருங்கால தலைமுறையினர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் 2.7 மடங்கு அதிகம் என கண்டறிந்துள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், இந்தியா 31 பஞ்சங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிகப்படியான கொழுப்பை சேமிக்கும் தெற்காசியர்களின் உடல்கள்
இந்தியா உட்பட தெற்காசியர்களின் உடல்கள், அவர்கள் உடலில் கொழுப்புச்சத்தை சேமித்து வைக்கும் குணம் கொண்டவை என நிபுணர்கள் கூறுகின்றனர். தெற்காசியர்களின் உடல்கள் கொழுப்புச்சத்தை எளிதாக எரிப்பதில்லை. இது நமது உடல்கள் பட்டினிக்கு பழகியதால் நடைபெறுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால், இரண்டு, மூன்று நாட்கள் உணவில்லாமல் தாக்குப் பிடிக்க, நமது உடல் கொழுப்புச்சத்தை சேமிக்கும் பண்புக்கு பழகிவிட்டது. இது நம் முன்னோர்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்ட பஞ்சங்களுக்கு எதிரான, நமது பரிணாம வளர்ச்சி என அறிவியலாளர்கள் கணித்துள்ளார்கள்.
அதிகப்படியான கொழுப்பு ஏன் சேர்கிறது?
பட்டினிக்கு பழகிய உடல்கள், ஆற்றலுக்காக உணவை செயல்படுத்தும் இன்சுலின் என்ற ஹார்மோனை எதிர்க்கத் தொடங்குகிறது. உடல் இன்சுலினை எதிர்க்க தொடங்கி விட்டதால், தசைகள் மற்றும் கல்லீரலால் ஆற்றலுக்காக நமது உடலில் உள்ள சர்க்கரையை உறிஞ்ச முடிவதில்லை. இதனாலையே, அதிகப்படியான சர்க்கரை நமது உடம்பில் கொழுப்பாக தங்கி விடுகிறது. உடம்பில் கொழுப்பு அதிகமாக தங்குவதால், நீரிழிவு நோய், இதய நோய்கள் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. அறிவியல் ரீதியாக இதை மாற்ற முடியாது என நிபுணர்கள் தெரிவித்தாலும், நமது பாரம்பரிய, பழங்கால உணவு முறைகளுக்கு மாறுவதும், உடற்பயிற்சி செய்வதும் நீரிழிவு நோயை எதிர்த்து போராட உதவும்.