'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' - உச்சநீதிமன்றம்
சமீபமாக திராவிடர் கழகம் மற்றும் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்றிணைந்து சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு ஒன்றினை நடத்தினர். இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிப்பு குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. மேலும் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து அறநிலையத்துறை அமைச்சரே பங்கேற்றது குறித்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே உதயநிதி மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்
தொடர்ந்து அவர், இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணி என்ன? என்பதனை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை முன்னதாக நடைபெற்ற நிலையில், சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலினும், இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றது குறித்து தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்தது. அந்த வகையில், இந்த மனு மீதான விசாரணை இன்று(நவ.,29)மீண்டும் நடைபெற்ற நிலையில், விசாரணைகள் நடைப்பெற்றது. அப்போது, 'உதயநிதி ஸ்டாலின் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.