வங்கக்கடலில் உருவாக இருக்கும் 2 புயல்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
வங்காள விரிகுடாவில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயல்களாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
இரண்டாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் புஜிவாரா விளைவு
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இரண்டாவது மேலடுக்கு சுழற்சி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி வரும் நாட்களில் இரண்டாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கக்கூடும் என்று தென் கொரியாவில் உள்ள ஜேஜு நேஷனல் யுனிவர்சிட்டியின் டைபூன் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி வினீத் குமார் சிங் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு காற்றழுத்த மண்டலங்களும் தொடர்பு கொண்டால் அது "புஜிவாரா விளைவை" தூண்டக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். அருகருகே இருக்கும் 2 புயல்கள் தங்களது இரு மையப்புள்ளிகளை சுற்றி சக்திவாய்ந்த நடனத்தில் ஈடுபடுவது புஜிவாரா விளைவு என்று அழைக்கப்படுகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வியாழக்கிழமை வலுவடையும்
புயல்கள் விரைவான தீவிரத்துடன் செயல்பட்டால் அவற்றை கணிப்பது கடினம்
செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவான தீவிரத்துடன் (RI) புதன்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் விஞ்ஞானி வினீத் குமார் சிங் தெரிவித்துள்ளார். வெப்பமண்டல சூறாவளி காற்றின் வேகம் 24 மணி நேரத்திற்குள் மணிக்கு 56 கிமீ அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கும் போது விரைவான தீவிரத்துடன் (RI) புயல்கள் செயல்படுவதாக கருதப்படுகிறது. விரைவான தீவிரத்துடன்(RI) செயல்படும் வெப்பமண்டல சூறாவளிகளின் பாதை மற்றும் தீவிரத்தை கணிப்பது மிக கடினமானஒரு காரியமாகும். பிப்ரவரி-மார்ச் 2023இல் உருவான ஃப்ரெடி புயல் மற்றும் ஜூன் மாதத்தில் உருவான பிப்பர்ஜாய் புயல் ஆகியவை விரைவான தீவிரத்துடன்(RI) செயல்பட்ட புயல்களுக்கு மிக சிறந்த எடுத்து காட்டுகளாகும்.
வெள்ளிக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
புஜிவாரா விளைவின் ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஏற்படும் புயல்கள் இந்தியாவின் கடற்கரையோரங்களில் உள்ள நகரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். முதலில் குறிப்பிடப்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் போது, அது "மிதிலி" என்று அழைக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் புதன்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் ஒரு சில கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வியாழக்கிழமை ஒடிசாவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.