பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை, பயங்கரவாதத்தை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதற்காகவும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த கட்சி, பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரி பிரிவினைவாத தலைவரும், காஷ்மீரி ஜிகாத்தின் தந்தை என அழைக்கப்படுவருமான, சையத் அலி ஷா கிலானியால் 2004ல் தொடங்கப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 கீழ் இந்த கட்சி ஐந்தாண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு குறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியின் ஆட்சி, பயங்கரவாதத்திற்கு எதிராக துளியும் சகிப்புத்தன்மை இல்லாத ஆட்சி என தெரிவித்துள்ளார்.
தெஹ்ரீக்-இ-ஹுரியத் ஏன் தடை செய்யப்பட்டது?
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், தெஹ்ரீக்-இ-ஹுரியத் கட்சி, இந்தியாவிடம் இருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து, அங்கு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது அதன் கொள்கை என தெரிவித்துள்ளது. மேலும் இந்த கட்சி,"பயங்கரவாதத்தை தூண்டுதல்", "இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்" மற்றும் பிரிவினையாக நடவடிக்கைகளை தூண்டுவதற்காக அறியப்படுவதாக அந்த அரசிதழ் விவரிக்கிறது. அந்த கட்சியைச் சார்ந்தவர்கள் பாகிஸ்தானுக்காக நிதி திரட்டுவதும், பாதுகாப்பு படைகள் மீது தொடர்ந்து கல்விச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அரசிதழ் குற்றம் சாட்டுகிறது. இந்த கட்சியின் நடவடிக்கைகள் தடுக்கப்படவில்லை என்றால், அது இந்தியாவிலிருந்து ஜம்மு காஷ்மீரை பிரித்து பாகிஸ்தான் உடன் சேர்ப்பதற்கான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதால், அதை தடை செய்வதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.