தமிழக மக்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நாடு முழுவதும் நாளை(நவ.,12) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவானது ஆளுநர் மாளிகை சார்பில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், "ஒளியின் திருநாளாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து சகோதர-சகோதரிகளுக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், 'அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீதான வெற்றியினை இந்த பண்டிகை குறிக்கிறது' என்றும், "'வசுதெய்வ குடும்பகம்' அல்லது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் நமது சனாதன தர்மம் என்பதன் முழுமையான வெளிப்பாடு இது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதற்கான உறுதிமொழியினை எடுத்துக்கொள்ள வேண்டும்' - ஆளுநர்
தொடர்ந்து பேசியுள்ள அவர், 'ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் உலகம் முழுவதுமுள்ள பாரதவாசிகள் ஒன்றிணைந்து தீபாவளி பண்டிகையினை கொண்டாடுகிறார்கள். நமது பிரதமர் மோடி ஆத்மநிர்பர் பாரதத்தினை(தற்சார்பு இந்தியா) உருவாக்க பாடுபட்டு வருகிறார்' என்று கூறியுள்ளார். மேலும், 'இதன் காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகள், இனிப்புகள், பட்டாசுகள் ஆகியவைகளை வாங்குவது என்னும் உறுதிமொழியினை நாம் எடுத்து கொள்ளவேண்டும்' என்றும் பேசியுள்ளார். அண்மையில் தான் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு சென்றதாகவும், அங்கு ஏராளமான பெண்கள் நமது தீபாவளியை ஒளிர செய்வதற்காக உழைப்பதை நேரில் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். 'அவர்களுக்கு நமது நன்றியினை தெரிவித்து கொள்ளவேண்டும்' என்றும் அவர் வீடியோ பதிவில் குறிப்பிட்டு பேசியுள்ளார்.