
கூமாபட்டி தங்கபாண்டியால் கிடைத்தது விமோச்சனம்; பிளவக்கல் அணை மேம்பாட்டிற்கு ₹10 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி என்ற குக்கிராமம் சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் உலகப் புகழ் பெற்றது. தங்க பாண்டி என்ற இளைஞர், பிளவக்கல் அணைக்கு அருகில் உள்ள தனது கிராமத்தின் இயற்கை அழகைப் பற்றி வெளியிட்ட எதார்த்தமான வீடியோ, அப்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதனால், அப்பகுதியை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கிய நிலையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுப்பணித்துறை அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, இந்தத் திடீர் புகழைப் பயன்படுத்திக் கொண்ட தங்க பாண்டி, ஊடகங்களிடம் பேசும்போது, பிளவக்கல் பெரியாறு அணைக்கு ஒதுக்கப்பட்ட ₹10 கோடி மேம்பாட்டு நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
உத்தரவு
தமிழக முதல்வர் உத்தரவு
இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிளவக்கல் அணைப் பூங்காவை ₹10 கோடி செலவில் மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என உடனடியாக அறிவித்தார். அதன்படி, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது, அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிளவக்கல் அணை மேம்பாட்டுப் பணிகளுக்காக ₹10 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அணையைச் சுற்றிச் சுற்றுச்சுவர், நுழைவாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம் மற்றும் செல்ஃபி எடுக்கும் பகுதி ஆகியவை அமைக்கப்பட உள்ளன.