அரபிக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வரும் 22ம்.,தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது வந்துள்ள தகவலின்படி, அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24-மணிநேரத்தில் புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது என்பதால் புதிதாக புயல் உருவாக வாய்ப்புகள் உள்ளதாம். அவ்வாறு உருவாகும் புயல் மேலும் வலுப்பெற்று வரும் 22ம்.,தேதி மாலை தீவிரப்புயலாக மாறக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இப்புயலால் தமிழகத்தினை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவின் பரிந்துரைப்படி இந்த புயலுக்கு 'தேஜ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.