நாளை திறக்கப்பட இருக்கும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தின் வீடியோக்கள்
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். தெற்கிலிருந்து நவி மும்பை வரை நீளும்(செவ்ரி மற்றும் நவா ஷேவா இடையே) 21.8 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடல் பாலம், தற்போதைய இரண்டு மணி நேர பயணத்தை 15-20 நிமிடங்களாக குறைக்கும். இந்தப் பாலத்தின் திறப்பு விழாவை அறிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இது பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இந்த பாலம் அதிகாரப்பூர்வமாக அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பாலம் என்று அழைக்கப்படுகிறது.
பைக் மற்றும் ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை
ரூ. 21,200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்திற்கான தொகையில் ரூ.15,000 கோடி கடன் மூலம் பெறப்பட்டதாகும். இந்த பாலம் மேலும் மகாராஷ்டிராவின் இரண்டு பெரிய நகரங்களான மும்பை-புனே விரைவுச்சாலையுடன் இணைக்கப்பட உள்ளது. ஆறு வழி கடல் பாலமாக கட்டப்பட்டிருக்கும் இந்த பாலம், கடலில் 16.50 கிலோ மீட்டர்களுக்கும், நிலத்தில் 5.50 கிலோ மீட்டர்களுக்கும் நீள்கிறது. இந்நிலையில், நாளை திறக்கப்பட இருக்கும் இந்த கடல் பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் அனுமதிக்கப்படாது என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. கார்கள், டாக்சிகள், இலகுரக மோட்டார் வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் டூ ஆக்சில் பஸ்கள் போன்ற வாகனங்கள் மணிக்கு 100 கிலோமீட்டர் வேக வரம்பைக் கொண்டிருக்கும்.