இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கிருந்து எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(டிச.,27) திடீரென எண்ணெய்யை வெளியேற்றக்கூடிய பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரவணா, பெருமாள் என்னும் 2 ஊழியர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றனர். இதில் பெருமாள் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பெருமாள் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது என்று அந்நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.