
கனமழை அலெர்ட்; நீலகிரி மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, சனிக்கிழமை (ஜூன் 14) அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகள் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறையாக கடைபிடிக்கப்படும் நிலையில், மோசமான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தனியார் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பிற மாவட்டங்களுடன் சேர்ந்து நீலகிரியும் மே மாதம் முதல் தீவிர தென்மேற்கு பருவமழையை எதிர்கொண்டு வருகிறது.
சனிக்கிழமை நீலகிரி முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை எச்சரிக்கை
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
நீலகிரி மட்டுமல்லாது கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களுக்கு ஜூன் 17 ஆம் தேதி வரை இதேபோன்ற எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் விடுமுறை உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அதிகரித்து வரும் மழையின் தீவிரம் மற்றும் இப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான வானிலை எச்சரிக்கையை எதிர்கொள்ளும் வகையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.