
ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?" என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது அதிமுகவின் கடமை" எனக் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறியதாவது: "அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதன்படி கமலுக்கு சீட் வழங்கப்பட்டது. அதை வரவேற்கிறோம். அதே போல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைகளையும் நிரூபிக்க வேண்டும். தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை." எனக்கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள்.. இப்போது எங்களுடைய நேரம்.. இ.பி.எஸ். சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்.. பிரேமலதா திட்டவட்டம்..#DMDK | #Premalatha | #EPS | #RajyaSabha | #PolimerNews pic.twitter.com/d7sJdgrBOT
— Polimer News (@polimernews) May 29, 2025
அதிமுக
அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
பிரேமலதா விஜயகாந்தின் கூற்றுப்படி, 2024 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தற்போது அதைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
"மாநிலங்களவை இடம் வழங்கப்படவில்லை என்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். பொறுமையுடன் இருக்கிறோம். நாங்கள் பதற்றமின்றி, தெளிவாக இருக்கிறோம். 'பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள்' என்ற பழமொழி போலவே நடந்துகொள்கிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அதிமுக தரப்பில், வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடை பெறுகிறது.
இதன் முடிவில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுமா என்பதையே அரசியல் வட்டாரம் தற்போது கவனிக்கிறது.
மறுபுறம், திமுக ஏற்கனவே தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.