ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த மக்கள் சென்னை வந்தடைந்தனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17ம்.,தேதி பெய்த கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தாதன்குளம் என்னும் பகுதியில் தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டறிந்த கேட்கீப்பர் இதுகுறித்த தகவலை ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார், அதன்படி அன்று இரவு திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் பைலட்டிற்கு இதுகுறித்து தகவலளிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு கருதி அந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனிடையே கனமழை தொடர்ந்து பெய்த காரணத்தினால் ரயிலில் பயணித்த 800 பயணிகளுள் 300 பேர் மட்டும் முன்னதாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் இருந்த பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயணிகளை மீட்பதற்குள் வெள்ளம் ரயில் நிலையம் முழுவதும் சூழ்ந்ததோடு, சாலைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை வந்தடைந்தனர்
இதனால் மீதமுள்ள 500 பயணிகள் கடந்த 2 நாட்களாக ரயில் நிலையத்திலேயே சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகின. நேற்று தான் இவர்களுக்கு மீட்புக்குழுவினரால் ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்க முடிந்தது. வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் படகுகள் கொண்டும் மீட்புப்படையினரால் அப்பகுதிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், மழை ஓய்ந்த நிலையில் சற்று வெள்ளநீர் வடிந்ததையடுத்து நேற்று(டிச.,19)இரவு தேசிய பேரிடர் மீட்பு படையினரால் உள்ளே சிக்கித்தவித்த மக்கள் மீட்கப்பட்டனர் என்று செய்திகள் வெளியானது. மீட்கப்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்பின்னர், அவர்களை வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனையடுத்து சிறப்பு ரயில்கள் மூலம் பயணிகள் அனைவரும் இன்று(டிச.,20)மதியம் 1 மணியளவில் சென்னை வந்தடைந்துள்ளனர்.