முகமது ஷமிக்கு ஆதரவாக நின்ற ராகுல் காந்தி; பழைய வரலாற்றை புரட்டும் காங்கிரஸ்
புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இது குறித்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், 2021இல் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்த பிறகு அவர் ட்ரோல் செய்யப்பட்டதை காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி நினைவு கூர்ந்தார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்துத்துவாவாதிகள் அப்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை திட்டியபோது ராகுல் காந்தி மட்டுமே அவருடன் நின்றார்" என்று கூறினார். 2021இல் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு, சமூக ஊடகங்களில் முகமது ஷமியை குறிவைத்து ட்ரோல்கள் அதிகம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீனிவாஸ் பிவியின் எக்ஸ் பதிவு
முகமது ஷமி 7 விக்கெட் வீழ்த்தியதற்கு ராகுல் காந்தி பாராட்டு
முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முகமது ஷமியை பாராட்டு ராகுல் காந்தியும் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "போட்டியின் நாயகன் முகமது ஷமியின் சிறப்பான பந்துவீச்சு! அவரது நிலையான மேட்ச் வின்னிங் ஆட்டங்கள் அவரை இந்த உலகக் கோப்பையில் சிறப்பான வீரராக மாற்றியுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவும் முகமது ஷமி உள்ளது குறிப்பிடத்தக்கது.