Page Loader
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
நடுவர் மன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2025
08:29 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. சிந்து நதிப் படுகையின் மேற்கு ஆறுகளில் அமைந்துள்ள இந்த இரண்டு திட்டங்களும், 1960 இல் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறி, பாகிஸ்தானின் ஆட்சேபனைகளை நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஒரு அறிக்கை மூலம் இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், நடுவர் நீதிமன்றத்தை சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது என்றும் அது வழங்கும் எந்தவொரு தீர்ப்பையும் செல்லாதது என்றும் அறிவித்தது. நடுவர் நீதிமன்றத்தின் சட்ட இருப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

பயங்கரவாதம்

பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக பாகிஸ்தான்

பாகிஸ்தானின் நடுவர் மன்றத்திற்கான அழுத்தம் பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக அதன் நிலையிலிருந்து திசைதிருப்பும் தீவிர முயற்சி என்றும் வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததாக இந்தியா சுட்டிக்காட்டியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதை மேற்கோள் காட்டி, அத்தகைய நடவடிக்கைகளை பாகிஸ்தானை நம்பகத்தன்மையுடன் நிறுத்தும் வரை ஒப்பந்த உறுதிமொழிகளை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்று இந்தியா கூறியது.