
வருமான வரி சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்; 2026 முதல் அமலுக்கு வருகிறது
செய்தி முன்னோட்டம்
வருமான வரிச் சட்ட சீர்திருத்தத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். வருமான வரிச் சட்டம், 2025 என அழைக்கப்படும் இது, சுமார் 64 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டம், 1961 க்கு பதிலாக ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும். வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த புதிய சட்டம் ஒரு முக்கிய சீர்திருத்தத்தைக் குறிக்கிறது. இது வரிச் சட்டங்களை எளிமையாகவும், வெளிப்படையாகவும், இணக்கமானதாகவும் மாற்றும். பழைய சட்டத்தில் உள்ள சிக்கலான சொற்கள் மற்றும் தேவையற்ற விதிகளை நீக்கி, எளிமையான மொழி நடைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. முன்னதாக, புதிய வருமான வரி மசோதா, ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த சட்டத்தின் முக்கிய அம்சம், புதிய வரிகளை விதிக்காமல், பழைய சட்டத்தில் இருந்த 819 பிரிவுகளை 536 ஆகவும், 47 அத்தியாயங்களை 23 ஆகவும் குறைத்துள்ளது. வார்த்தைகளின் எண்ணிக்கையும் 5.12 லட்சத்தில் இருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டம் முதன்முறையாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 புதிய சூத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. இது வரி விதிகளைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. இந்த மாற்றங்கள், வரி செலுத்துவோருக்கு வரி விதிகளைப் புரிந்துகொள்வதில் இருந்த சிரமங்களைக் குறைத்து, வரி நிர்வாகத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.