பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி, இந்திய வாழ்க்கை முறை மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(மே 31) கூறியுள்ளார். மேலும், "எதையும் புரிந்து கொள்ளாமல், கடவுளை விடவும் தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பும் ஒரு கூட்டத்தின் தலைவர் தான் பிரதமர் நரேந்திர மோடி" என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஆறு நாள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றிருக்கும் ராகுல் காந்தி கலிபோர்னியாவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த மக்களுடன் இன்று பேசினார். அப்போது, அவர் தனது பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த இந்திய அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்தது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கலிபோர்னியாவில் பேசும்போது ராகுல் காந்தி இன்று கூறியதாவது:
உலகம் மிகப்பெரியது மற்றும் சிக்கலானது. அதனால், எந்தவொரு நபராலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது. இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று உறுதியாக நம்பும் ஒரு குழுவினர் உள்ளனர். கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கடவுளுக்கே தங்களால் விளக்கம் அளிக்க முடியும் என்று நினைக்கக்கூடியவர்கள். நமது பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர் தான். நீங்கள் மோடிஜியை கடவுளுடன் உட்காரவைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கடவுளுக்கே விளக்குவார். அவர் பேச்சை கேட்டு, நான் எதை உருவாக்கினேன் என்று கடவுளே குழம்பிவிடுவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்தியா இன்று இல்லை. முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினர் நேரடியாகவே தாக்கப்படுகிறார்கள்.