Page Loader
கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2024
05:50 pm

செய்தி முன்னோட்டம்

கனமழை காரணமாக நவம்பர் 27, 2024 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

டெல்டா

டெல்டா பகுதிகளில் விடுமுறை

முன்னதாக, இன்று (நவம்பர் 26) அதிகாலை பெய்த கனமழையால் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. நாளை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவாலான காலநிலைக்கு மத்தியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடும் உத்தரவை பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளை தெரிந்துகொள்ளவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.