LOADING...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரியில் 'ரெட் அலர்ட்'

எழுதியவர் Venkatalakshmi V
Aug 05, 2025
08:30 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிக மழைக்கு 'ரெட் அலர்ட்' (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று காலை வரை) திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மேடவாக்கம் சந்திப்பு, தாம்பரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மற்றும் நீலகிரியின் பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் மற்றும் தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் நிலைமை உள்ளது.

மழை

10ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

இந்த நிலை 10ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனவும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 8ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.