
பெருமைமிகு கோவை: 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக தேர்வு
செய்தி முன்னோட்டம்
கோவை மாவட்டம், முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்'தின் கீழ், 15-வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத நபர்களை அடையாளம் காண்பது மற்றும் அவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த திட்டத்தில், தமிழக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, 2024-2025 கல்வியாண்டில் கோவையில் முதற்கட்டமாக 20,199 நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி அளித்து, அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
தற்போது, திட்டத்தின் இரண்டாம் கட்டம் மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, சூலூர் மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விவரங்கள்
இரண்டாம் கட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
இதில், 1,782 ஆண்கள் மற்றும் 5,464 பெண்கள் உள்பட மொத்தமாக 7,246 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கான தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளன.
கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த முறை இலக்குகள் நிர்ணயிக்கப்படாமல், எழுதவும் படிக்கவும் தெரியாத ஒவ்வொருவரும் கணக்கில் கொண்டு, அவர்களுக்கு கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது".
"கோவை ஒரு பெரிய மாவட்டமாக இருப்பதால், இங்கு பயில்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் 100 சதவீத எழுத்தறிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோவையிலும் பயிற்சி முடித்து தேர்வை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன், வருகிற நவம்பர் மாதத்தில் கோவையும் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்படும்" என்றனர்.