லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த போது சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள், லியோ ட்ரெய்லருக்காக காத்திருந்தனர். அக்டோபர் 5 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால் நேரத்தை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்திருந்தது. ஒரு வழியாக அக்டோபர் 5 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு டிரைலர் வெளியாகும் என தகவல் தெரிவித்தது. மாலை 6:30 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது முதல் ரசிகர்கள் ட்ரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.
ரோகிணி திரையரங்கை அடித்து நொறுக்கிய விஜய் ரசிகர்கள்
லியோ ட்ரெய்லர் தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் வெளியானது. அதன்படி சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் வெளியாகும் 2 மணி நேரத்திற்கு முன்னரே ரோகிணி திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கூட தொடங்கினர். மாலை 6:00 மணிக்கு ரசிகர்கள் திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டு விஜய் படத்தின் பாடல்கள், வசனங்கள் திரையரங்கில் ஒளிபரப்பப்பட்டன. அப்போது அதற்கு திரையரங்கில் இருந்த நாற்காலிகள் மேல் ஏறி நடனம் ஆடி விஜய் ரசிகர்கள் நாற்காலிகளை சேதப்படுத்தி திரையரங்கை அலங்கோலப்படுத்தினர். இந்த ரசிகர்கள் கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரவு 7:00 மணிக்கு மேல் ட்ரைலர் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டு ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
திரையரங்கம் மீது குறை கூறும் விஜய் ரசிகர்கள்
ரோகிணி திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு திரையரங்கம் மீது விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ட்ரெய்லர் திரையிடுவதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை எனவும், ட்ரெய்லர் பார்க்க டிக்கெட் இல்லாதவர்களும் உள்ளே நுழைந்ததால் தான் இவ்வாறு நடைபெற்றதாக விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும், திரையரங்கு நிர்வாகம் ஆயிரம் நபர்கள் கூடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் நான்காயிரம் ரசிகர்கள் வந்ததால்தான் அசம்பாவிதம் நடந்தது எனவும் கூறப்படுகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனா ரோகிணி திரையரங்கு
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கு இது போன்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்த வருடம் ஜனவரி மாதம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரோகிணி திரையரங்கில் வெளியானது. ரோகிணி திரையரங்குக்கு துணிவு திரைப்படம் பார்க்க வந்த 19 வயது வாலிபர் லாரி மீது ஏறி நடனமாடியதில் தவறி விழுந்து உயிரிழந்தார். கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையிடப்படும் போதும் ரசிகர்களால் ரோகிணி திரையரங்கின் திரை கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படத்தின் டிரைலரை திறந்து வெளியில் திரையிடுவதற்கு ரோகிணி திரையரங்கம் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்ததும், பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை அனுமதி மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.