சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சுறுசுறுப்பிற்கு காரணமாகும் அதிசய மூலிகை; நண்பர் பகிர்ந்த தகவல்
நடிகர் ரஜினிகாந்த், தான் திரையுலகிற்கு கால் பாதிக்க மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தது, தனது நண்பர் 'ராஜ் பகதூர்' என பல தருணங்களில் பகிர்ந்ததுண்டு. ரஜினிகாந்த், பெங்களுருவில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்த காலகட்டத்தில், அந்த பஸ்சின் டிரைவராக இருந்தவர் ராஜ் பகதூர். ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை கண்டு கொண்டு, அவரை அப்போதைய மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர சொல்லி, ராஜ் பகதூர் வற்புறுத்தி அனுப்பி வைத்ததாக கூறுவார். இவர்களின் நட்பை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான், ரஜினி நடித்திருந்த 'குசேலன்'. ராஜ் பகதூர், தனது நண்பர் ரஜினியின் படங்களை பார்த்து, அவரிடம் படத்தை பற்றிய கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவிப்பாராம்.
ரஜினியின் இளமை ரகசியத்தை கூறிய ராஜ் பகதூர்
தற்போது வெளியான 'ஜெயிலர்' பட வெளியீட்டின் போது, ராஜ் பகதூர் ஒரு சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது, ரஜினியின் இளமைக்கான ரகசியத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, ரஜினிகாந்த் அதிக அளவில் தியானம் செய்வதன் மூலம் தான் இத்தகைய பொலிவையும், ஆற்றலையும் பெறுகின்றார் என்றும், அடிக்கடி ரஜினி இமயமலைக்கு சென்று, அங்கு பல முனிவர்களை சந்திக்கும்போது, அந்த முனிவர்கள் அவருக்கு இளமையாக இருக்க மருத்துவ தாவரங்களின் சில வேர்களைக் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த அதிசய மூலிகை வேரை ஒருமுறை சாப்பிட்டால், ஒரு வார காலத்திற்கு உடலுக்கு சக்தி தருமாம், அதோடு மனதிற்கு உற்சாகமும் தரும் என்று கூறியுள்ளார்.