சித்தா ப்ரோமோஷன் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம்- மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்
பெங்களூரில் நடந்த நடிகர் சித்தார்த்தின் சித்தா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கோரினார். நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் வெளியாகி உள்ள 'சித்தா' திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது. அதில் அத்துமீறி நுழைந்த கன்னட அமைப்பினர், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தனர் இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ், "தசாப்தங்களாக நடந்து வரும் காவிரி விவகாரத்தை குறித்து ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்பதை விட்டுவிட்டு, சாமானிய மக்களையும், கலைஞர்களையும் தொந்தரவு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது". "ஒரு கன்னடனாக, அனைத்து கன்னடர்கள் சார்பாக, நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் சித்தார்த்", என ட்விட் செய்திருந்தார்.