Page Loader
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க கேரளா விரையும் 5 தனிப்படை போலீசார்
நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க கேரளா விரையும் போலீசார்

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க கேரளா விரையும் 5 தனிப்படை போலீசார்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 25, 2025
02:36 pm

செய்தி முன்னோட்டம்

போதைப்பொருள் வழக்கில் தற்போது கைதாகி சிறையில் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் கைதிற்கு காரணமான தயாரிப்பாளர் அளித்த தகவலின் பேரிலும், அடுத்ததாக வளையத்தில் சிக்கியிருப்பவர் நடிகர் கிருஷ்ணா. அவர் மீது போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா தற்போது கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாக, அவரைப்பிடிக்க 5 தனிப்படை போலீசார் குழு அங்கு விரைந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

பின்னணி

போதைப்பொருள் வழக்கின் பின்னணி என்ன?

சமீபத்தில் சென்னையில் ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட அடிதடி சம்பவத்தில், அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அவரிடம் போதைப்பொருள் விநியோகுத்த பிரதீப் என்பவரும் கைது செய்யப்பட்டார். பிரதீப்பிடம் நடந்த விசாரணையில் அவர், "நடிகர் ஸ்ரீகாந்துக்கு 'தீங்கிரை' படக்குழு சார்பில் பிரசாத் கோரிக்கைப்படி நான் போதைப்பொருள் வழங்கினேன்" என்ற பரபரப்பான வாக்குமூலத்தை அளித்தார். இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் ரெய்டு செய்யப்பட்டு, அவர் தற்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோகைன் பயன்படுத்தியிருப்பது, மேலும் நட்சத்திர ஹோட்டல்களில் தொடர்ந்து போதைப்பொருள் சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதும் போலீசார் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

தொடர்பு

சினிமா பிரபலங்களுக்குத் தொடர்பா?

ஸ்ரீகாந்த், பிரசாத் ஆகியோர் மூலமாக மற்ற சினிமா பிரபலங்களும் இந்த போதைப்பொருள் வழக்கில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதி செய்ய போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். இதற்காக இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் புதிய திருப்பமாக, இயக்குநர் விஷ்ணு வரதனின் சகோதரரும் நடிகருமான கிருஷ்ணாவின் பெயர் அடிபடவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படும் கிருஷ்ணாவை, கைது செய்து சென்னை கொண்டு வர, போலீசார் தனிப்படையாக சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணா தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்து வைத்திருப்பதாகவும், தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.