சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கலிபோர்னியாவில் உள்ள ஒரு பொதுவெளியில், செவ்வாய்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது . முன்னதாக, ஜனவரி 1, 2024 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்தால் கோல்டி பிரார் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். ப்ரார் கொல்லப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூடு சம்பவம், ஒரு குடியிருப்புக்கு வெளியே மாலை 5:25 மணியளவில் நடந்தது என கூறப்படுகிறது.அடையாளம் தெரியாத நபர்கள் பிரார் மற்றும் அவரின் கூட்டாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தொழிற்போட்டி காரணமாக கோல்டி கொலை செய்யப்பட்டதாக தகவல்
கொலையைத் தொடர்ந்து, சுடப்பட்ட இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் ப்ரார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அறிக்கைகளின்படி, போட்டி கும்பல் உறுப்பினர்களான அர்ஷ் டல்லா மற்றும் லக்பீர் ஆகியோர் ப்ரார் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். மே 29, 2022 அன்று மான்சாவின் ஜவஹர்கே கிராமத்தில், மூஸ் வாலா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரிவுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், மூஸ் வாலாவின் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. இருப்பினும், லாரன்ஸின் கூட்டாளியான விக்கி மிதுகேராவைக் கொன்றதில், மூஸ் வாலாவின் பங்கு இருப்பதாகவும், அவரை நிர்பந்தித்ததாகவும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது பிரார் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.