பிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி தான் "பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இன்று(மே 23) சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார். "இந்த மேடையில் கடைசியாக நான் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனை தான் பார்த்தேன். ஆனால், பிரதமர் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி தான் 'பாஸ்'." என்று ஆஸ்திரேலிய பிரதமர் சிட்னியில் உள்ள குடோஸ் வங்கி அரங்கில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் கூறினார். இரு நாட்டு பிரதமர்களும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற போது, பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நடனக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
பிரதமர் மோடிக்கு முன்பாக பேசிய அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது:
நான் பிரதமராக பதவியேற்று ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் நானும் பிரதமர் மோடியும் ஆறாவது முறையாக சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளரும். ஏற்கனவே, இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக வளர்ந்துவிட்டது. எங்களுடன் இந்திய பெருங்கடலை பகிர்ந்து கொள்ளும் மிக முக்கியமான நாடாகவும் இந்தியா இருக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் இந்த இருதரப்பு உறவில் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்று. இந்தியா எங்களுடைய ஒரு முக்கியமான மூலோபாய கூட்டாளி நாடாகும். எங்களிடம் வளமான நட்பு உள்ளது. நிச்சயமாக, உலகின் கிரிக்கெட் மைதானங்களில் நாங்கள் மீண்டும் ஒருமுறை சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுவோம்.