
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானால் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பஹல்காமில் மதரீதியான தாக்குதல் நடத்தி 26 பேரைக் கொன்ற பிறகு, இந்த ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியது.
இந்த ஒப்பந்தம் 1960இல் உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இரு தரப்பும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அறிக்கைகளின்படி, பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர் சையத் அலி முர்தாசா மூலம், மே மாதத்திலும் அதற்குப் பிறகும் அனுப்பப்பட்ட தொடர் கடிதங்களில் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளியுறவு அமைச்சகம்
இந்திய வெளியுறவு அமைச்சத்திற்கு அனுப்பட்ட கடிதம்
இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கு பாகிஸ்தான் கடிதங்களை அனுப்பிய நிலையில், இதுகுறித்தான அனைத்து தகவல்தொடர்புகளும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பாகிஸ்தான் உலக வங்கியிடம் இதில் தலையிட கோரிக்கை விடுத்த நிலையில், அந்த அமைப்பு மத்தியஸ்தம் செய்ய மறுத்துவிட்டது.
சிந்து நதி ஒப்பந்தம் கிழக்கு நதிகளை (சட்லஜ், பியாஸ், ரவி) இந்தியாவிற்கும் மேற்கு நதிகளை (சிந்து, ஜீலம், செனாப்) பாகிஸ்தானுக்கும் ஒதுக்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்திய தேசிய உரையில், தண்ணீரும் இரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று உறுதியாகக் கூறினார்.
பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று வலியுறுத்தினார்.