காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு
காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீனத்திலும், அந்த பிராந்தியத்திலும் தற்போது நடைபெறும் போர் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என அவர் கணித்துள்ளார். அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர், நேற்றுடன் 13வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹமாஸை ஒழித்து, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான வாக்குறுதியை, பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெதன்யாகு மீண்டும் உறுதிப்படுத்தினார். "பிலடெல்பி காரிடார் - அல்லது இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால், காசாவின் தெற்குப் புள்ளி- நம் கைகளில் இருக்க வேண்டும். அது மூடப்பட வேண்டும். வேற எதுவும் அப்பகுதியை நாம் விரும்புவதுபோல் இராணுவமயமற்றதாக மாற்றாது என்பது தெளிவாகிறது" என்றார்.
போர் மாதங்களுக்கு தொடரும்
அக்டோபர் 7 சம்பவத்தை போன்று மற்றொரு சம்பவம் நடக்காத வகையில், ஹமாஸை ஒழித்து, காசா பகுதியை ராணுவமற்ற பகுதியாக மாற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. "போர் அதன் தீவிரத்தில் உள்ளது. நாங்கள் எல்லா முனைகளிலும் போராடுகிறோம். வெற்றியை அடைவதற்கு கால அவகாசம் தேவைப்படும். இஸ்ரேலிய இராணுவ தலைமை தளபதி கூறியது போல், போர் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும்" என நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சால், தற்போது வரை 21,672 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும், ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளனர். இந்த ராணுவ நடவடிக்கை, காசாவில் வாழ்ந்து வந்த அனைத்து 23 லட்சம் மக்களையும், இடம்பெயர நிர்பந்தித்துள்ளது.