
நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் இயக்கம் அவருக்கு இந்த பொறுப்பை வழங்க முன்மொழிந்துள்ளது. 71 வயதான சுசீலா கார்க்கி, இளைஞர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், நாட்டின் நலனுக்காகப் பாடுபடத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த முன்மொழிவு, நேபாளத்தில் பரவலான அமைதியின்மை மற்றும் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் ராஜினாமாவுக்குப் பிறகு வந்துள்ளது. மாணவர்களால் நடத்தப்படும் ஜென் இசட் போராட்டங்கள், செப்டம்பர் 8, 2025 அன்று, காத்மண்டு போன்ற பெரிய நகரங்களில் தொடங்கி, அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கோரி வருகின்றன.
சமூக ஊடக தடை
போராட்டத்திற்கு வித்திட்ட சமூக ஊடக தடை
முக்கிய சமூக ஊடகங்களுக்கு அரசாங்கம் விதித்த தடை, இந்த போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஜென் இசட் இயக்கத்தின் பிரதிநிதிகள், இடைக்காலப் பிரதமராகக் சுசீலா கார்க்கியைத் தேர்ந்தெடுத்ததை முறைப்படுத்துவதற்காக, ராணுவத் தளபதியைச் சந்திக்க உள்ளனர். சந்திப்பிற்கு முன், அவரை ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. சுசீலா கார்க்கி, 2016 முதல் 2017 வரை நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர். 1979 இல் தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். 2010 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேபாளத்தின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஒரு மரியாதைமிக்க, நடுநிலையான நபர் தலைமை தாங்க வேண்டும் என்ற மக்களின் விருப்பமாக அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.