LOADING...
காசாவில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 25 பாலஸ்தீனியர்கள் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் 25 பாலஸ்தீனியர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 25 பாலஸ்தீனியர்கள் பலி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2025
07:38 pm

செய்தி முன்னோட்டம்

இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) அன்று 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். உதவி மையங்கள் மற்றும் தற்காலிக முகாம்களுக்குச் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாக காசாவின் உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தாக்குதல்கள், காசாவில் நிலவி வரும் கடுமையான உணவு நெருக்கடிக்கு மத்தியில் நடந்துள்ளது. சர்வதேச உணவு நெருக்கடி மதிப்பீட்டு அமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலைப் பகுப்பாய்வு, காசா நகரில் அதிகாரப்பூர்வமாக பஞ்சம் நிலவுவதாக அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் சுமார் 2.5 மாதங்களாக காசா மீது விதித்த முழுமையான முற்றுகைக்குப் பிறகு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

விபரங்கள்

கொல்லப்பட்டவர்கள் விபரங்கள்

நசர் மருத்துவமனையின் தகவல்படி, தெற்கு காசாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்த தாக்குதல்கள், இடம்பெயர்ந்தவர்கள் தஞ்சம் புகுந்த கூடாரங்களை இலக்காகக் கொண்டிருந்தன. ஷேக் ராத்வான் கள மருத்துவமனையின் தகவலின்படி, ஜிகிம் எல்லைக்கு அருகில் உதவிக்காக கூடியிருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் 5 பேர் இறந்தனர். காசாவின் பிற பகுதிகளில் நடந்த தனித்தனி சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையே, காசாவின் பட்டினி தொடர்பான அறிக்கையை தவறானது என்று கூறி, ஹமாஸ் வேண்டுமென்றே பணயக்கைதிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து உணவைத் தடுத்து வைப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.